February 28, 2019 தண்டோரா குழு
இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. பின்னர் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின் அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் அணி என மூன்றாக பிரிந்தது. மூன்று அணியினரும் இரட்டை இலை சின்னத்தை சொந்தம் கொண்டாடியதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. இதற்கிடையில் ஒபிஎஸ், ஈபிஎஸ் ஒன்றாக இணைந்தது.
இதனால் தினகரன் அணி மற்றும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி இரட்டை இலை சொந்தம் கொண்டாடியது. பின்னர் நடைபெற்ற பல கட்ட விசாரணைக்கு பிறகு இறுதியில் நவம்பர் 23,2017 அன்று அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதற்கான காரணங்களையும் வெளியிட்டது.
இந்நிலையில் தினகரன் அம்மா மக்கள் முனேற்ற கழகம் என்ற தனி கட்சிய தொடங்கினார். இருப்பினும் இரட்டை இலையை மீட்டு அதிமுகவை கைப்பற்றுவது தான் எனது குறிக்கோள் என்று கூறியிருந்தார்.இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவு சரியானதே என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், டிடிவி தினகரன் – சசிகலா தரப்பு தனித்தனியே தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.