August 1, 2020
தண்டோரா குழு
இ பாக்ஸ் கல்லுாரிகளின் சார்பில் புதிய ஸ்டார்ட் அப் ஸ்டுடியோ துவக்க விழா நடந்தது.
இவ்விழாவில், அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர், ஆந்திர பிரதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகர், தமிழ்நாடு திட்ட குழு உறுப்பினர் மற்றும் கல்வி தகவல் தொடர்பு களஞ்சியம் தலைவர் டாக்டர் இ. பாலகுருசாமி பேசியதாவது:
இத்தகைய தனித்துவமிக்க ஸ்டார்ட் அப் ஸ்டுடியோவை இ பாக்ஸ் கல்லுாரிகள் துவக்கியுள்ளதை பாராட்டுகிறேன். பொறியியல் படிப்பின் முக்கிய நோக்கமே இந்தியாவை ஒரு தொழில் முனைவோர் தேசமாக மாற்ற வேண்டும் என்பதே. இத்தகைய முயற்சியை இ பாக்ஸ் கல்லுாரிகள் துவக்கியுள்ளதை பாராட்டுகிறேன். கல்லுாரியை விட்டு வெளியே வரும்போதே ஒரு தொழில் முனைவோராக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் படிக்கும்போதே ஒரு புதிய முயற்சியுடன், ஒரு தொழில் முனைவோராக வெளியே வரவேண்டும். இவர்கள் தங்களது செயல்பாடுகளை ஒரு முதலீடாக மாற்ற வேண்டும். நான் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்தபோது, ஒவ்வொரு கல்லுாரியிலும் ஒரு புதுமையான ஆராய்ச்சி பரிசோதனை கூடம் இருக்க வேண்டும் என கூறியுள்ளேன். இந்த ஆராய்ச்சி கூடத்தில், மாணவ, மாணவியர் 24 மணிநேரமும் எப்போது வேண்டுமானாலும் உள்ளே சென்று புதியவற்றை கண்டறிய வாய்ப்பு இருக்க வேண்டும்.
இந்த முயற்சியை இ பாக்ஸ் கல்லுாரிகள் மேற்கொண்டுள்ளதை பாராட்டுகிறேன். கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வேலை வழங்கும் நிறுவனங்கள் தேர்வு செய்யும்போது பல்வேறு குறைபாடுகளை சொல்கின்றனர். புதுமையை கண்டறியும் திறமை இல்லை; கற்பனை வளம் இல்லை; எண்ணங்கள் இல்லை எனக்கூறுகின்றனர். எனவே, இது போன்ற முயற்சிகள், புதியவற்றை கண்டறிந்து புதிய பொருட்களை உருவாக்குவதாக அமையும். ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு ஏற்ற பொறியியல் கல்வியை கற்க வேண்டும். சமுதாயத்தில் உள்ள பிரச்னைகளை அறிந்து, அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் பொருட்களை உருவாக்க வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொரு பொறியியல் கல்வி பயிலுவோரும், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோரும் இதில் ஈடுபட வேண்டும். சமுதாயத்திற்கு ஏற்ற வகையில், ஆராய்ச்சிகள் இருக்க வேண்டும்.
சமுதாய பிரச்னைகளை தீர்க்கும் வகையில், பொறியியல் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ள இ பாக்ஸ், மற்றும் அதனுடன் இணைந்துள்ள கல்லுாரிகளையும், ஆம்பிஷாட் ஆகியவற்றை பாராட்டுகிறேன். இத்தகைய தீர்வுகளை கண்டறியும் முயற்சியை தொலைநோக்காக கொண்டு இ பாக்ஸ் கல்லுாரிகள் செயல்பட வேண்டும். கல்லுாரி நிர்வாகிகள், முதல்வர்கள், மாணவர்கள் என எல்லோரும் இதில் பங்கேற்று, இதை நடைபெறச் செய்ய வேண்டும். பல்வேறு பிரச்னைகள் ஆரம்பத்தில் துவக்கப்பட்டாலும், இறுதியில் அவை முழுமையாக செய்து முடிக்கப்படுவதில்லை. இது போன்று நடக்க கூடாது. ஒவ்வொருவரும் பங்கேற்று முயற்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.உங்களது கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் தொழில் முனைவோராக வெளியே வரவேண்டும். இதற்கான ஒத்துழைப்பை கல்லுாரி நிர்வாகங்கள் அளிக்க வேண்டும். இந்தியாவிற்கு அதிக அளவில் தொழில் முனைவோர் தேவை.
இ பாக்ஸ் கல்லுாரிகள் ஒரு அருமையான வேலையை மேற்கொண்டுள்ளன. இ பாக்ஸ் கல்லுாரிகள் மாணவர்களுக்கு புதிய ஒளியை ஏற்றும். பொறியியல் கல்லுாரியில் படிப்போரை மேலும் பல புதுமைகளை கண்டறியக் கூடியவர்களாக மாற்ற வேண்டும். வேலை வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இது போன்ற அருமையான முயற்சியில் வெற்றிபெறவும், சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஏற்றதாக இருக்க ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, பாலகுருசாமி பேசினார்.
மேலும் விழாவில் ஆம்பிஷாப்ட் தலைமை செயல் அதிகாரி பிரதீப் துரைசாமி அறிமுகவுரையாற்றினார். ஆம்பிஷாப்ட் தலைமை தொழில்நுட்ப தலைவர் சிவராமகிருஷ்ணன் திட்டம் குறித்து விளக்கினார். இ பாக்ஸ் கல்லுாரிகளின் இயக்குனர் ராம்குமார் நன்றி கூறினார்.