July 6, 2020
தண்டோரா குழு
கோவையில் இளநீர் வியாபாரம் செய்யும் பெண்ணின் மருத்துவ செலவிற்கு தனது சொந்த பணத்தில் இருந்து 25,000 மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கோவை அடுத்த சிறுவாணி பகுதியை சேர்ந்தவர் ஜோதி.இவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தந்தை இறந்து 30 ஆண்டுகள் ஆன நிலையில் இவரும் இவர் தாயாரும் கிடைத்த வேலைகளை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால் அதற்கு போதிய பணம் இல்லாததால் மிகவும் சிரமத்தில் உள்ளதாகவும், தங்களால் முடிந்தவரை பணம் அளித்து உதவுமாறும் ஜோதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.
அந்த கோரிக்கை கடித்தத்தை மாவட்ட ஆட்சியர் பார்த்து அவரது சொந்த வங்கி கணக்கில் இருந்து 25,000 ரூபாய் காசோலையை அந்த பெண்ணிற்கு அளித்து உதவியுள்ளார்.