March 25, 2019 தண்டோரா குழு
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தென்காசி மக்களவைத் தொகுதியில் நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருக்கிறேன் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. அப்போது, தென்காசி தொகுதியில் தேர்தல் ஆணையத்திடம் தனி சின்னம் கேட்டு வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் கிருஷ்ணசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான பூ.முத்துராமலிங்கத்திடம் கிருஷ்ணசாமி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தென்காசி மக்களவைத் தொகுதியில் நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருக்கிறேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக வருவார். தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். முதல்வர் பழனிசாமி ஆட்சி தொடர்ந்து நடைபெறும். 2021-ம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பழனிசாமி தமிழக முதல்வராக மீண்டும் ஆட்சி அமைப்பார். தென்காசி தொகுதியில் மகத்தான வெற்றி பெற்று, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். தென் தமிழகத்தின் முகவரியை மாற்றி அமைப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.