June 6, 2019
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைக்க அரசாணை வெளியிட்டுள்ளது.
மாநில அரசுக்கு தொழிலாளர் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் பெண் பணியாளர் பாதுகாப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் ஆண்டு முழுவதும் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைப்பதற்கான அனுமதியை அரசு வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அக்கடித்தை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், வாரம் ஒரு நாள் ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும். எந்தவொரு நாளிலும் ஒரு பணியாளரை 8 மணிநேரத்துக்கு மேல் அல்லது வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்க வைக்கக் கூடாது. அதுபோல ஓவர் டைம் பணியையும், ஒரு நாளுக்கு 10.30 மணி நேரத்துக்கு மேல் அல்லது வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற வைக்கக் கூடாது.
இயல்பான நாட்களில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றத் வேண்டும் என்ற அவசியமில்லை. எழுத்து மூலம் ஒப்புதல் பெற்ற பிறகு வேண்டுமானால் பெண்கள் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை தகுந்த பாதுகாப்புடன் பணியாற்ற அனுமதிக்கலாம் உள்ளிட்ட நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன
தமிழகத்தில் 24 மணி நேரமும் திறந்து வைக்கும் அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் தொழில்வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கையாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.