June 2, 2020
தண்டோரா குழு
சலூன், ஸ்பாக்களுக்குச் செல்ல ஆதார் கார்டு அவசியம் என்று தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் 30
வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு நிபந்தனைகளுடன்
படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப் படுகின்றன. அந்த வகையில் சலூன்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் சென்னையில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நேற்றுதான் கடைகள் திறக்க அனுமதி கிடைத்தது.
இந்நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
“அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் நுழைவாயிலில் சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது கைகளை சுத்தம் செய்வதற்கான சுத்திகரிப்பான் நுழை வாயிலில் வைக்கவேண்டும்.
வாடிக்கையாளர்களின் பெயர் முகவரி கைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விபரங்களை ஒரு பதிவேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். பணியாளர்கள் தங்களது கைகளை துடைப்பதற்காக பேப்பர் நாப்கின் வைக்கப்பட வேண்டும். அவைகள் பயன்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பாக அகற்றுவதை உறுதிசெய்யவேண்டும்.
வாடிக்கையாளருக்கு சேவையினை துவங்கும் முன்னரும், சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு கைகளை கழுவ வேண்டும் அல்லது சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். இத்தகைய சுய தூய்மை நடைமுறைகளை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அழகூட்டும் பணியினை / சேவையினை துவங்கும் முன்பும் செய்ய வேண்டும்.
உரிமையாளரும் பணியாளர்களும் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும். அடிக்கடி தங்களது மூக்கு வாய் மற்றும் கண்களை தொடுவதைத் தவிர்க்கவேண்டும். அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் இருமல், சளி அல்லது காய்ச்சல் இருப்பின் அவர்கள் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொண்டு மருத்துவரின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பணியில் ஈடுபடக் கூடாது. காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் இருக்கும் போது அழகு நிலையங்களுக்கு வாடிக்கையாளர்கள் வரக்கூடாது”
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.