May 28, 2018
பீகாரில் சிறுவனுக்கு ரத்த தானம் வழங்குவதற்காக இஸ்லாமியர் ஒருவர் ரம்ஜான் நோன்பை பாதியில் முடித்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூபேந்திரகுமார், இவரது மகன் புனித்குமார் . இவர் தெலாஸ்மியா என்ற ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் 15 நாட்களுக்கு ஒரு முறை புதிதாக ரத்தம் ஏற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென புனித்குமாரின் உடல் மோசமானதால் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டான். திடீரென அவனுக்கு ரத்தத்தின் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டன. இதனால் அவனுக்கு உடனடியாக ‘ஏ பாசிடிவ்’ ரத்தம் ஏற்றவேண்டும் என மருத்துவர் கூறினார். ஆனால் அந்த ரத்த வகை புனித்குமாரின் குடும்பத்தினரிடம் இல்லை, மேலும் மருத்துவமனையிலும் அந்த ரத்தம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சிறுவனுக்கு ரத்தம் வேண்டி கஞ்ச் மாவட்ட ரத்த தான குழுவின் நிறுவனர் அன்வர் உசேனை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, அவர் உடனே ‘ஏ பாசிடிவ்’ ரத்த வகையை கொண்ட ஆலம் ஜாவீத் என்பவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவர் நோன்பிருப்பதால் ரத்தம் எடுக்க முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, சிறுவனின் உயிரை காப்பாற்ற தான் இருந்த நோன்பை ஆலம் ஜாவீத் உடனே முறித்துக் கொண்டார். அதன் பின் சிறுவனுக்கு ரத்த தானம் செய்தார். இந்த உதவியை என்றும் மறக்க மாட்டோம் என்று சிறுவனின் குடும்பத்தினர் கூறினர்.
ஒரு உயிரை காப்பாற்ற இறைவனுக்காக இருந்த நோன்பை முறித்து கொண்டு சிறுவனுக்கு ரத்த தானம் வழங்கிய ஆலம் ஜாவீத்திற்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.