September 7, 2018
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 7வது நபரான அன்வர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை வெரைட்டி ஹால் சாலை சுந்தரம் வீதி, சுங்குவார் சந்து பகுதியில் வசித்து வரும் ஆசிக் என்பவரை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில், ஆசிக்கை சென்னையிலிருந்து சந்திக்க 4 பேர் வருவதாக கிடைத்த தகவல் காவல்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கடந்த 1ஆம் தேதி ரயில் மூலமாக வந்த 4 பேருடன், ஆசிக்கை பிடித்து வெரைட்டி ஹால் காவல்துறையினர் விசாரித்தனர். 5 பேரிடமும் மத்திய உளவுப்பிரிவினரும், சிறப்பு புலனாய்வு பிரிவினரான எஸ்.ஐ.யு.வும் விசாரித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினருமாக இருந்து வந்ததும், இஸ்லாம் மதத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருபவர்களை கண்காணித்து வந்ததும் தெரியவந்தது.
கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா மாநில தலைவர் அன்புமாரி ஆகியோர் தொடர்ந்து இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருவதாக கோவையை சேர்ந்த ஆசிக், மற்ற 4 பேரிடமும் சொல்லியுள்ளார். அதனால், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவர்கள் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்யவும் வந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இந்த கொலை சம்பவத்தை ஆட்டோ மூலம் நிகழ்த்தவும், அதற்கான ஆயுதங்கள், நோட்டமிடவும் ஆசிக்கின் நண்பர்கள் உதவுவதாக தெரிவித்திருப்பதையும் வாக்குமூலத்தில் காவல்துறையினர் உறுதி செய்தனர்.
இதையடுத்து, கோவையை சேர்ந்த ஆசிக், பைசல் ரஹ்மான், விழுப்புரம் மாவட்டதை சேர்ந்த இஸ்மாயில், சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, சலாவுதீன், சம்சுதீன் ஆகிய 6 பேரை வெரைட்டி ஹால் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து , தலைமறைவாக இருந்த குனியமுத்தூரை சேர்ந்த அன்வரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோதமாக செயல்படுவதற்கு சதி திட்டம் தீட்டுவது (143), கூட்டு சதி (120 (பி)), மற்றும் தடுப்புக்காவல் சட்டமான UAPAசட்டத்தின்படி அரசுக்கும், பொதுமக்களுக்கும் சட்ட ஒழுங்கு பிர்சனையை ஏற்படுத்தக்கூடிய மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவது உள்ளிட்ட உள்ளீட்டு பிரிவுகளான 15,16,18 , 20, 38 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கைது செய்யப்பட அன்வரை கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வரும் 18வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அன்வர் சிறையில் அடைக்கப்பட்டனர்.