June 3, 2019
தண்டோரா குழு
இந்தி கட்டாயம் இல்லை, 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் – மத்திய அரசு
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு புதிய திருத்தப்பட்ட கல்விக்கொள்கை வரைவுத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்றாவது புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தது. கடந்த மாதம் 31 ஆம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் வரைவு சமர்ப்பிக்கப்பட்டது.
புதிய கல்விக்கொள்கை வரைவில், மும்மொழிக் கல்வி முறை பரிந்துரை செய்யப்பட்டது. மாநிலங்களின் தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியை மாநிலங்களின் விருப்பத்துக்கேற்ப ஏதேனும் இந்திய மொழிகளை தேர்வு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்தி இல்லாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயம் தேர்வு செய்யவேண்டும் என வரைவில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையில்,தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுகிறது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் விடுத்தனர். சமூக வலைத்தளங்களிலும் இந்தி மொழிக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. இது பெரும்சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திருத்தப்பட்ட வரைவு கல்விக்கொள்கை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் பயில வேண்டும் என்பது நீக்கப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.