February 28, 2019 தண்டோரா குழு
பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த 14ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் இந்திய விமானப்படை நேற்று அந்த இயக்கத்தின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியானதாக கூறப்பட்டது. இதற்கிடையில், நேற்று காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் அத்துமீறி புகுந்த பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை அந்நாட்டு ராணுவ வீரர்கள் சுற்று வளைத்தனர். தற்போது அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை வைத்தனர். அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என இந்தியா சார்பில் தொடர்ந்து வலியுறுத்தினர். இந்தியா இதற்காக இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிக்கப்படுகிறார் என அறிவித்தார்.