February 28, 2019 தண்டோரா குழு
கடந்த 2 நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளிடையே பிரச்சனை சுமூகமாக முடியும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த பிப். 14ல் நடந்த புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு எல்லையிலும் உஷார் நிலையில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பல்வேறு உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளித்து வருகிறது. அதைப்போல் பாகிஸ்தானை கண்டித்தத்தும் வருகிறது. நேற்று அமெரிக்கா சார்பில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் – உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் “ இந்தியா பாகிஸ்தானிடமிருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்றும், இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும்.இரு நாடுகளிடையே நிலவும் பதற்றத்தை குறைக்க அமெரிக்க தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.