November 24, 2018
தண்டோரா குழு
இந்தியா முழுவதும் சுமார் 1.15 லட்சம் ஏடிஎம்-களை மூட வங்கிகள் முடிவு செய்து வருவதாக ஏடிஎம் நடவடிக்கைகளை கண்காணித்து வரும் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவீன டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலும் நாம் பணத்தை எடுக்க ஏடிஎம்களை நோக்கி தான் செல்கிறோம். ஏடிஎம் சேவைபணப் பரிவர்த்தனைகளில் மக்களுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது . நமது தேவைக்கான பணத்தை ஏடிஎம்-களில் இருந்து எடுத்து கொள்ளும் வசதிகள் அடிப்படை தேவையாக மாறிவிட்டன.
இந்தியாவில் செயல்படும் பல வங்கிகள் நாடு முழுவதும் சுமார் 2.38 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களை அமைத்துள்ளனர். ஏடிஎம் சேவை பராமரிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில் வருகின்ற 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள சுமார் 1.15 லட்சம் ஏடிஎம்-களை மூட வங்கிகள் முடிவெடுத்துள்ளதாக ஏடிஎம் நடவடிக்கைகளை கண்காணிக்கு CATMi என்ற கூட்டமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஏடிஎம் மூடுவதற்கு காரணம்
இரண்டு வருடங்களுக்கு முன்பு கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் 500ரூபாய் 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் திடீர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக புதிதாக வந்த ரூபாய் நோட்டுகளின் அளவு குறைக்கப்பட்டது.
நாடு முழுவதும் தற்போது இயங்கி வரும் ஏடிஎம்-கள் அனைத்தும் பழைய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்காக வடிவமைப்பட்டவை ஆகும். இதனால் பழைய ரூபாய் நோட்டுக்களுக்கான அளவீடுகள் உடன் புதிய ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்தில் வைப்பது வங்கிகளுக்கு பெரிய சிக்கலாகவே இருந்து வருகிறது.
மேலும் இதற்கு தீர்வாக புதிய ரூபாய் நோட்டுகளை பாரமாரிக்கும் வகையில் ஏ.டி.எம்-களின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கு அதிக அளவிலான பணமும் பொருட்செலவு ஏற்படும். தற்போது ஏ.டி.எம். களை நிர்வகிக்க தேவையான நிதி நிலைமை வங்கிகள் மோசமடைந்து வருவதாக வங்கிதரப்பில் கூறப்படுகிறது. இதுதவிர பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் நாட்டின் பெரும்பாலான ஏடிஎம்-களின் மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் பல வங்கிகளுக்கு நிதி சிக்கல் எழுந்துள்ளது. இதற்காக ஏற்பட்ட இழப்புகளிலிருந்து நிறுவனங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.
இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 1.15 லட்சம் ஏடிஎம்-களை மூட வங்கிகள் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏடிஎம் சேவை வழங்குவதில் கூடுதல் செலவுகளை சந்திப்பதற்கான திட்டங்களை எதுவும் இல்லை. ஆனால் வங்கிகள் இதனை ஈடு செய்ய தவறினால் அது ஏடிஎம்-களை மூட வழிவகுக்கும் என ஏடிஎம் நடவடிக்கைகளை கண்காணிக்கும் CATMi கூட்டமைப்பு கருதுகிறது.
இந்தியாவில் பல குடும்பங்கள் மத்தியரசு மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பல சேவைகளில் பலனடைந்து வருகின்றன. அரசு உதவி பல குடும்பங்கள் பெற்று வருகின்றனர். ஒருவேலை வங்கிகள் ஏடிஎம்-களை மூடும் நடவடிக்கைகளை அமலாக்கினால் அரசுன் உதவி பெறும் குடும்பங்களின் நிலை கவலைக்கிடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.