February 19, 2019 தண்டோரா குழு
காரமடை அருகே உள்ள பழமை வாய்ந்த அரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற மாசிமக தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடனை செலுத்தினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோயில் வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றதாகும். கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் கொங்கு நாட்டை ஆண்டு வந்த திருமலை நாயக்கர் இக்கோவிலுக்கு புதிய தேரை வழங்கி மாசி மகம் பௌர்ணமி தினத்தன்று தேரோட்டத்தை நடத்தி பெருவிழாவாக கொண்டாடப்படுவதை துவக்கி வைத்துள்ளார். அதன்படி சுமார் ஆயிரம் ஆண்டுகள் பலமையனா இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெற்று
வருகிறது. அந்தவகையில் இவ்வாண்டு மாசிமக விழா இம்மாதம் 13 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்று முதல் அரங்கநாதர் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினசரி நடைபெற்று வந்த நிலையில் இன்று விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி இன்று மாலை ஐந்து மணியளவில் நடைபெற்றது. இதனையடுத்து, கோவிலின் முன்புறம் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் அரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருள தேரரோட்டம் புறப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தபராக் என்ற கோஷத்துடன் வடம் பிடித்திழுக்க கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக திருத்தேர் பவனி நடைபெற்றது. பக்தர்கள் பலரும் தேரின் மீது வாழைப்பழங்களை வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என பல மாவட்டங்களில் இருந்தும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காரமடையில் இன்று மாலை நடைபெற்ற திருத்தேரோட்ட நிகழ்ச்சியினை முன்னிட்டு கோவை -மேட்டுப்பாளையம் இடையேயான சாலை மார்க்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. தேரை முன்னிட்டு காரமடை பகுதியில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.