December 20, 2018
தண்டோரா குழு
ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதித்த உத்தரவை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உரிமம் பெறாத, பதிவு செய்யப்படாத ஆன்லைன் கடைகள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கூறி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், மருந்துச்சீட்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்கப்படுவதால், காலாவதியான, போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இது பொதுமக்களின் உயிர் மற்றும் உடல்நலத்திற்கு அபாயகரமானது என கூறியிருந்தது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து அண்மையில் உத்தரவிட்டது.
இதற்கிடையில், இந்த வழக்கு மீண்டும் கடந்த 17ம் தேதி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை வகுக்கும் வரை அதன் மீதான தடை தொடரும் எனவும் ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பாக மத்திய அரசு ஜன., 31ம் தேதிக்குள் புதிய விதிமுறைகளை வகுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் மருந்து வணிக நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தனர் . இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதித்ததிருந்த தடையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இடைக்கால கோரிக்கையில் தீர்ப்பு வரும் வரை தனி நீதிபதியின் தீர்ப்பை நிறுத்தி வைத்தும் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.