February 21, 2019
தண்டோரா குழு
விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு கோவை மாவட்டத்தில் இதுவரை மாவட்டத்தில் இதுவரை 68 ஆயிரம் விவசாயிகள் விண்ணப்பித்து உள்ளனர்.
மத்திய அரசு 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்து இருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாயிரம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இதுவரை 68 ஆயிரம் விவசாயிகள் ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்து கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பெறப்பட்டு உள்ளது. இந்த விண்ணப்பங்கள் குறித்த பரிசீலனை தற்போது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்காக தோட்டக்கலை துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மனுக்களில் உள்ள விவரங்களை சரிபார்க்கும் பணியில் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா தாசில்தார் தலைமையின் கீழ் வருவாய் துறை தோட்டக்கலை துறை , அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள விவசாயிகளின் பெயர் பட்டியல் இந்த வார இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.