• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிரியர் தேர்வில் தகுதி மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் – டாக்டர் ராமதாஸ்

January 27, 2017 தண்டோரா குழு

ஆசிரியர் தேர்வில் தகுதி மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு அடுத்த இரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அறிவித்திருக்கிறார். தகுதித் தேர்வு நடத்தும் தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 30,000 பேருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பதால், அவர்களைக் கொண்டே தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், புதிதாக தகுதித் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார்.

ஆசிரியர்கள் நியமனத்தில் இழைக்கப்படும் சமூக அநீதி ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதால் மட்டும் தீர்ந்து விடாது. ஆசிரியர் தகுதித் தேர்வே சமூக நீதிக்கு எதிரானது. அத்தேர்வு முறை ஒழிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

ஆனால், அது உடனடியாக சாத்தியமில்லை என்பதால்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும்; அதில் எடுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

அது மட்டுமின்றி, அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே மாதிரியான தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கக்கூடாது; இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தனித்தனியாகத் தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்திவருகிறது. அதை ஏற்று, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை 5% குறைத்த அரசு, அதற்கு பதிலாக ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதிகாண் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தியது தான் அநீதியாகும்.

இதனால், 10 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் படிப்பு படித்தவர்களை விட, இப்போது ஆசிரியர் படிப்பு படித்தவர்களின் தகுதிகாண் மதிப்பெண் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் மிகவும் எளிதாக தேர்ச்சி பெறுவர். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்காது.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12-ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது. அதே நேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருந்ததால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை.

பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வு மதிப்பெண்களில் நம்பிக்கை இல்லாமல்தான் தகுதித் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. ஆனால், தகுதித் தேர்வு மதிப்பெண்களில் முழு நம்பிக்கையில்லாமல், அதில் 60% மதிப்பெண்ணையும், பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் 40% மதிப்பெண்ணையும் எடுத்துக் கொள்வது கேலிக்கூத்தானது.

எனவே, ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்துவிட்டு, தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் தகுதித் தேர்வு முறையையும் ரத்து செய்து விட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்யப்படும் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க