April 16, 2018 தண்டோரா குழு
ஆசிபா கொலைக்கு நீதி கேட்டு கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக கூடிய 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆசிபா கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆசிபா கொலைக்கு நீதி கேட்டும், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தினை பாதுகாக்க வலியுறுத்தியும், சட்டக்கல்லூரி மாணவி பிரியா மீதான இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரியும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஆனந்தன்,
சிறுமி ஆசிபா மற்றும் உன்னாவ் சிறுமி ஆகியோருக்கு உரிய நீதி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் பாலியல் வன்முறை தொடர்பாக பேசியதற்காக மாணவி இடைநீக்கம் செய்யப்பட்டது அரசியல் சாசனம் அளித்துள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு எதிரானது எனவும் எனவே அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறித்தினார்.