• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அழிந்து வரும் மண் வளத்தை மீட்க அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – சத்குரு கோரிக்கை

December 6, 2021 தண்டோரா குழு

“அழிந்து வரும் நம் மண் வளத்தை மீட்டெடுக்க அனைத்து தேசங்களும் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று உலக மண் தினமான இன்று (டிசம்பர் 5) ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“விவசாயம் செய்வதற்கு மண்ணில் குறைந்தப்பட்சம் 3 சதவீதமாவது கரிமப் பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும்” என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நம் உடலிற்கு மூலமான உயிருள்ள இம்மண், முழு அழிவை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது. இதனை மிகுந்த அவசரத்துடன் அணுகுவது, எல்லா தேசங்களும் நிறைவு செய்ய வேண்டிய மிக முக்கிய பொறுப்பாக இருக்கிறது. நாம் இதனை நிகழச் செய்வோம்” என கூறியுள்ளார்.

மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘கான்சியஸ் பிளானட்” என்னும் இயக்கத்தை சத்குரு விரைவில் தொடங்க இருக்கிறார். இந்நிலையில், மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் கூறியுள்ளதாவது:

“தற்போது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தான் பெரிய பிரச்சனையாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், மண் வளம் இழந்தால், அது இதை விட மிகப்பெரும் பாதிப்புகளை உலகளவில் ஏற்படுத்தும். ஆகவே, நாம் நமது கவனத்தை மண் வளம் காப்பதை நோக்கி திருப்ப வேண்டும்.மண்ணில் உள்ள பல்லுயிர்களை காப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதர்களும் நாம் எத்தகைய ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம் என்பது குறித்த விழிப்புணர்வை பெற வேண்டும்.

கார்பன் வெளியீட்டை குறைப்பதில் (Carbon sink) மண் மிக முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன், அதிகப்படியான தண்ணீரை சேமிக்கும் திறனை பெற்றுள்ள மண், அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாகவும் விளங்குகிறது. 36 முதல் 39 இன்ச் வரை உள்ள மேல் மண்ணின் (Top soil) வளம் தான் பூமியில் உள்ள 87 சதவீத உயிர்களின் வாழ்விற்கு மூலமாக உள்ளது. நம் உடலே கூட இந்த மண்ணால் ஆனது தான். எனவே, மண் வளத்தை மேம்பட்டுத்தாமல் நம் உடலும், மற்ற உயிர்களும் மேம்பட முடியாது.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தேர்தல் பிரச்சினைகளாக மாற வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்தும் அரசாங்கங்கள் தான் ஆட்சியில் அமர தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

UNCCD என்ற பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலில், “உலகில் ஒவ்வொரு ஆண்டும் 75 பில்லியன் டன் மண் தன்னுடைய வளத்தை இழந்து வருகிறது. இதன் விளைவாக, வறட்சி ஏற்பட்டு 12 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் விவசாயம் செய்வதற்கு தகுதியற்றதாக மாறுகிறது. இதனால், 20 மில்லியன் டன் உணவு உற்பத்தி பாதிப்புக்குள்ளாகிறது” என தெரிவித்துள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகளின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆய்வு அறிக்கைகளின் படி, “அடுத்த 45 முதல் 60 ஆண்டுகளில் உலகில் வெறும் 80 முதல் 100 வகையான பயிர்களை மட்டுமே விவசாயம் செய்ய முடியும். ஏனென்றால், கடந்த 30 ஆண்டுகளில் உயிர் பெருக்கத்திற்கு உதவும் பூச்சி வகைகளில் (biomass insects) 80 சதவீதம் காணாமல் போய்விட்டன. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த 45 முதல் 50 ஆண்டுகளில் உலகில் உணவு தட்டுப்பாடு ஏற்படும். அதனால், மக்கள் மாபெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

மேலும் படிக்க