February 17, 2021
தண்டோரா குழு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சிவகங்கை
மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இணைந்து அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு
கல்லூரிகளின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி இன்று (17.02.2021) பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜி.வினாயகமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. நா. ராஜேந்திரன் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.
அவர் தமது உரையில்,
சாலைப்பாதுகாப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்திலும் முக்கியமான அங்கம் வகிக்கிறது. இந்தியாவில் சாலைகளைப் பற்றி குறிப்பிடும் பொழுது அவற்றை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று ஆங்கிலேயர் காலத்து சாலைகள்.
இரண்டாவது ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னர் அமைக்கப்பட்ட சாலைகள். ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் சிமிண்டால் ஆன சாலைகள் போடப்பட்டது. இராணுவ வீரர்கள் மற்றும் தளவாடங்களை கொண்டு செல்வதற்கு ஏதுவாக சாலைகளை அமைத்தனர்.ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து
வியாபாரத்திற்க்காக இந்தியா வருவதற்கு சாலைகள் அமைக்கப்பட்டது.இந்தியாவிலிருந்து ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சில்க் ஏற்றுமதி செய்வதற்கும் இவை பெரிதும் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்றரை இலட்சம் பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். பலருக்கு
உடல் சிதைவும் ஏற்படுகிறது.இதனால் அந்த குடும்பம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதோடு பொருளாதார அடிப்படையிலும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.சாலைகளில் விபத்து நடப்பதற்கு மிக முக்கியமான காரணம் வாகனங்களில் ஏற்படும் இயந்திரக் கோளாறே ஆகும். வாகனங்கள் முறையாக
பராமரிக்கப்படாததால் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் நன்கு உணர வேண்டும் சாலைப்பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்ற வேண்டும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே ஏற்படுத்துவதற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்படும் போக்குவரத்து காவல் பிரிவில் சாலை விதிகளை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது பற்றி மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியைப் போல் அழகப்பா பல்கலைக்ககழகத்திலும் சாலை பாதுகாப்பு குறித்த அமைப்பை பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்படுத்துவதற்கு பல்கலைக்கழகம் உதவி புரியும் என்றார்.
காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் எம். அருண் இந்நிகழ்ச்சியில்
சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையில்,
உலகில் உள்ள மொத்த வாகன எண்ணிக்கையில் ஒரு சகவிகிதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. ஆனால் இந்தியாவில் 11 சதவிகிதம் விபத்துகள் நடைபெறுகிறது. 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்டவர்களே அதிகமாக விபத்துக்குள்ளாகின்றனர்.
காரைக்குடியில் மொத்தம் 25,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.அவர்களிடையே சாலை
போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.
அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பேரா. த.ரா.குருமூர்த்தி மற்றும் கல்லூரி
வளர்ச்சிக்குழும முதன்மையர் முனைவர் வி. சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு இணைப்புக் கல்லூரிகளின் மாணவ-மாணகளிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசும் சான்றிதழும் துணைவேந்தர் அவர்களால் வழங்கப்பட்டது. துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே. கணேசமூர்த்தி நன்றி
கூறினார்.