July 9, 2018 தண்டோரா குழு
கோவையில் உள்ள அரசுப்பள்ளியில் தொடர்ந்து சில நாட்களாக இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தீ வைப்பதாகவும்,தொடர்ந்து இது போன்ற செயல்களை தடுத்து பாதுகாக்க வழங்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
கோவையை அடுத்த சூலூர் பகுதியில் தெற்கு துவக்கப்பள்ளி செயல்படுகிறது.கடந்த இரு வாரங்களுக்கு முன்,இப்பள்ளி வளாகத்தில் உள்ள மூன்று வகுப்பறைகளில் மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டு புத்தகங்கள் மற்றும் பொருட்கள் கருகின.இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் நேற்று சீருடைகள் வைத்திருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டு 100 க்கும் மேற்பட்ட சீருடைகள் கருகி நாசமாகின.குறிப்பாக விடுமுறை தினங்களில் தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெறுவதாகவும்,சமூக விரோதிகளின் கைவிரிசை தான் இந்த தீ விபத்து சம்பவத்திற்கு காரணம் எனவும்,இதனால் பள்ளிக்கு பாதுகாப்பு வழங்க கோரி அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
மேலும்,போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும்,பள்ளிக்கு காவலாளியை நியமிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.தீ விபத்தின் காரணமாக தங்களது புத்தகங்கள் எரிந்து விட்டதால் படிக்க முடியாத சூழலில் இருப்பதாக மாணவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.