February 12, 2019
தண்டோரா குழு
+2 படிக்கும் திறமையான ஏழை மாணவர்களை அகரத்துக்கு அறிமுகப்படுத்துங்கள் என அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டு காலமாக ஏழை எளிய மற்றும் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி அறிவை கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன்.
இந்நிலையில், அகரம் அமைப்புக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த மாணவர்களை அடையாளம் காட்டும்படி அவர் ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். அரசுப்பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் உயர்கல்வி பெற அகரம் ஃபவுண்டேஷன் கடந்த பத்தாண்டுகளாக துணைபுரிகிறது. பெற்றோர்களை இழந்த, ஆதரவற்ற, வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.
இதுவரை சுமார் 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம். 2019-ம் ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும் திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வறுமை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் போகிற மாணவர்களை கீழ்க்காணும் அகரம் ஃபவுண்டேஷன் அலுவலக எண்ணிற்குத் தொடர்பு கொள்ள செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். ப்ளஸ் டூ மாணவர்களின் வகுப்பறை கரும்பலகையில் இந்த தொடர்பு எண்களை எழுதிப்போடும் படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி 80561 34333 / 98418 91000” என்று சூர்யா அறிக்கை தெரிவித்திருக்கிறார்.