February 27, 2019 தண்டோரா குழு
அமெரிக்கா போல பாக். உள்ளே சென்று தாக்க இந்தியா தயார், தயங்காது என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த 14ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் இந்திய விமானப்படை நேற்று அந்த இயக்கத்தின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியானதாக கூறப்படுகிறது. இதற்கிடையில்,காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் அத்துமீறி புகுந்த பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
இன்றைய சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அமெரிக்க படைகள் பாகிஸ்தானிற்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை அழித்தது போன்று எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒட்டுமொத்த நாடும் எங்களுக்கு ஆதரவாக உள்ளது. உரிய நேரத்தில் எதுவும் நடக்க வாய்ப்புள்ளது. இந்தியாவால் இனியும் பொறுத்திருக்க முடியாது. எல்லையில் கடுமையான பதற்றம் நீடித்து வருகிறது எனக் கூறியுள்ளார்.
முன்னதாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாக்., விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு செயலாளர், பாதுகாப்பு செயலாளர், உளவுத்துறை அதிகாரிகள், முப்படை தளபதிகள் ஆகியோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
போர் விமானங்களை எந்த நேரத்திலும் இயக்க தயாராக இருக்கும்படி விமானப்படைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.