December 8, 2018
தண்டோரா குழு
கோவை அருகே கொலை செய்யப்பட்ட அமமுக பிரமுகர் ஜெயவேணுவின் உடலை கிணற்றில் இருந்து எடுக்க முடியாமல் 15 நாட்களுக்கு மேலாக துடியலூர் போலீசார் திணறி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேணு. இவர் அமுமுக நகரச் செயலாளராக இருந்து வந்தார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக கோவை நீதிமன்றத்திற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். கடந்த அக்டோபர் 1ம் தேதி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைக்காக கோவைக்கு வந்துள்ளார். வந்தவர் மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பாததைத் தொடர்ந்து அவரது அண்ணன் ஜெய்சுரேஷ் மற்றும் உறவினர்கள் கோவைக்கு தேடி வந்துள்ளனர். இங்கு வந்து அவரது நண்பர்களிடன் விசாரித்தபோது மீண்டும் தூத்துக்குடிக்கே ஜெயவேணு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர். தொடர்ந்து எங்கு தேடியும் ஜெயவேணு கிடைக்கதாதால் மீண்டும் கோவைக்கு வந்து துடியலூர் காவல் நிலையத்தில் ஜெயவேணுவின் மனைவி ஜெயதீபா புகார் அளித்தார்.
மேலும் அதில் தனக்கு ஜெயவேணுவின் நண்பர்களான ராஜேஷ் மற்றும் சுரேஷ் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனிடையே சுரேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து துடியலூர் போலீசார் தனிப்படை அமைத்து ராஜேசை கைது செய்தனர். விசாரணையில் ஜெயவேணுவுடன், ராஜேஷ் துடியலூர் அடுத்துள்ள வரப்பாளையம் பகுதியில் உள்ள அவர்களது நண்பரான சுரேஷ் வீட்டிற்கு சென்றதும், அங்கு மூவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெயவேணு ராஜேஷை கொலை செய்து, இருசக்கர வாகனத்தில் ஜெயவேணுவின் உடலை வைத்து கட்டி அருகில் உள்ள சண்முகம் என்பவரது தோட்டத்தில் உள்ள சுமார் 150 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றதாக தெரியவந்தது.
இதனையடுத்து கடந்த 21 தேதியில் இருந்து ஜெயவேணுவின் உடலை தோண்டி எடுக்க காவல் துறையினர் முயன்று வருகின்றனர். ஆனால் இது வரை உடலை எடுக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.