September 14, 2018
தண்டோரா குழு
அனல்மின் நிலைய மின்னுற்பத்திக்கு நிலக்கரி தேவை பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் எண்ணூர் அனல் மின் நிலையம் மூலமாக தற்போது 450 மெகாவாட் மின்சாரமும், வடசென்னை அனல் மின்நிலையம் மூலமாக 2 ஆயிரத்து 430 மெகாவாட் மின்சாரமும், வல்லூர் தேசிய அனல்மின் நிலையம் மூலமாக ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள அனல் மின்நிலையங்களை பொறுத்தவரை நிலக்கரி பற்றாக்குறை பிரச்னையால், முழுமையான அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலையிலேயே உள்ளது. தமிழக அரசு தரப்பிலும் நிலக்கரி பற்றாக்குறை குறித்து தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் அனல்மின் நிலைய மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில்,
தமிழக அனல் மின் நிலையங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் நிலக்கரி இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. தமிழகத்தில் தினசரி மின் உற்பத்திக்கு சராசரியாக 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுவதாகவும், உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அறிவுறுத்தி, தமிழகத்திற்குத் தேவையான நிலகரியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனால், ஒரு நாள் மின் உற்பத்திக்கு தேவையான 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் நிலக்கரி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்