February 26, 2019
தண்டோரா குழு
அதிமுக – பாமக கூட்டனி குறித்த கேள்விக்கு அது ஒரு கேவலமான கூட்டணி என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு அணியும் அதிமுக தலைமையில் ஒரு அணியும் இப்போது உருவெடுத்துள்ளது. அதில் அ.தி.மு.க கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் பா.மகவுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 21 தொகுதிகளில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ம.க, அ.தி.முகவுக்கு ஆதரவு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக – பாமக கூட்டனி குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அப்போது பேசிய அவர்,
அதிமுக – பாமக கூட்டணி கேவலமான கூட்டணி. காவிரி விவகாரம், நீட் தேர்வு போன்ற தமிழக பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை கொடுக்காத பாஜகவுடன், அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளது. பாஜக அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழ் மதிப்பெண் அளித்தவர் ராமதாஸ். ஆனால் அதை முற்றிலுமாக மறந்துவிட்டு பூஜ்யத்துடன் இணைந்து விட்டார். தமிழக மக்களின் எதிர்காலத்தை மோடியிடம் அடகுவைத்து விட்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது ” என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.