March 19, 2019 தண்டோரா குழு
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் கூட்டாக வெளியிட்டனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் கூட்டாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிமுக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர்.
முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் அறிக்கையை தயாரித்தது. இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையை பன்னீர் செல்வம் வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.
தேர்தல் அறிக்கையை தயாரித்த குழுவிற்கு ஓ பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்தார். தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்,
*கைவிடப்பட்ட பெண்கள், நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 1.500 வழங்கப்படும்.
*அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வங்கி கணக்கில் உதவித் தொகை ரூ.1,500 வழங்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இந்த பணம் வழங்கப்படுகிறது.
*புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: பயிற்சிகள் அளிக்கப்படும்.
*பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம்.
*பொது சிவில் சட்டத்தை நடைமுறைபடுத்தக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க புதிய அமைப்பு ஒன்று தேசிய அளவில் உருவாக்கிட வலியுறுத்தப்படும்.
*எம்.ஜி.ஆர் திறன் வளர்ச்சி திட்டத்தில் மூலமாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
*வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பகுதிகளுக்கு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
*மேற்குதொடர்ச்சி மலையில், பருவமழைக் காலங்களில் பெறும் நீரை பயன்படுத்த தடுப்பணை, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.
*கடலில் கலக்கும் நீர் வறட்சியால் பாதிக்கப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
*வீணாகும் தண்ணீரை பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
*காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*காவிரி இணைப்பு கால்வாய் திட்டம் கொண்டு வரப்படும்.
*மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*வேளாண் கடன்களுக்காக உறுதியான திட்டம் ஒன்றை கொண்டு வருவோம்.
*கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படும்.
*நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவோம்.
*எஸ்.சி/ எஸ்.டி/ பி.சி/ எம்.பி.சி மக்களுக்காக புதிய இடஒதுக்கீட்டு சட்டம் கொண்டு வரப்படும்.
*தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
*தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல்மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்.
*புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*மதம் மாறினாலும் சாதிரீதியான இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
*இலங்கை இன படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.