February 20, 2019
தண்டோரா குழு
அதிமுக கூட்டணியை பார்த்து டிடிவி தினகரனும் எங்கள் இலக்கு சட்டமன்ற தேர்தல் என பின்வாங்குவார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மணிமண்டப எதிர்ப்பு போன்ற சில விவகாரங்களை பா.ம.க தலைவர் ராமதாஸ் கொள்கை அளவிலே மக்கள் நலன் சார்ந்து நாணலாக விட்டுக்கொடுத்து இருக்கின்றோம் என தெரிவித்து இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
கோவை மண்டல அதிமுக அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த அம்மா பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர் இந்த நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் ஆர் வி உதயகுமார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர் நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
அதிமுக கூட்டணி அறிவிப்பு தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு வந்த பின்னர் டிடிவி தினகரன் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கவில்லை , சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்று சொன்னாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.அங்கு தேர்தலில் நிற்பதற்கே ஆட்கள் இல்லை என்று தகவல் வருகின்றது. திமுகவும் தேர்தலில் நிற்க ஆட்கள் இல்லாமல் தவித்துகொண்டு இருக்கின்றனர். கூட்டணியை ஒருங்கிணைத்து அறிவிக்க முடியாமல் இருக்கின்றனர். தமிழக மக்களின் நலனை முன்னிருத்தி இந்த கூட்டணி அமைக்கப்பட்டு,40 தொகுதியும் நமதே என்ற இலக்கை நோக்கி பயணிக்கின்றோம் என்றார்.
மேலும், ஜெயலலிதா மணிமண்டபத்தை எதிர்க்கும் பா.ம.க ராமதாஸ் உடன் எப்படி கூட்டணி என்ற கேள்விக்கு, பா.ம.க தலைவர் ராமதாஸ் மிகத்தெளிவாக சொல்லி இருக்கின்றார். கொள்கை அளவிலே மக்கள் நலன் சார்ந்து நாணலாக விட்டுக்கொடுத்து இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். அதையே நாங்கள் வழிமொழிகின்றோம் எனவும் தெரிவித்தார். இந்த முடிவை ஓட்டு மொத்த தமிழகமும் வரவேற்கின்றனர் என தெரிவித்த அவர், கலைஞரை கொலை செய்ய முயற்சி செய்ததாக வைகோ மீது கொலை முயற்சி பழியை சுமத்து திமுகவிலிருந்து வெளியேற்றினார்கள். அதற்காக 9 பேர் தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டனர். அதற்காக இயக்கமே திமுகவை எதிர்த்து துவக்கினார். அப்படிப்பட்டவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு கூட்டணி அமைக்கும்போது, சூழலுக்கு ஏற்று தமிழக நலன் என்று வரும்போது விட்டுக்கொடுக்க தயாராக உள்ளனர் எனவும் தெரிவித்தார். தேமுதிகவுடன் கூட்டணி இழுபறியில் இருக்கின்றதே என்ற கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதில் எதுவும் தெரிவிக்காமல் சென்றார்.