February 23, 2019
தண்டோரா குழு
விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி ராஜேந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு விருந்து அளிக்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்தார்.இந்த விருந்து நிகழ்ச்சி திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருந்து முடிந்து ராஜேந்திரன் எம்.பி. திண்டிவனத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை 5.30 மணியளவில் கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். காரை அருமைச்செல்வம் என்பவர் ஓட்டினார். எம்.பி.யின் உறவினரான தமிழ் செல்வன் என்பவரும் உடன் பயணித்துள்ளார்.
இந்நிலையில், திண்டிவனத்தை அடுத்த சிலோச்சனா பங்காரு திருமண மண்டபம் அருகே கார் சென்ற போது, சாலையின் நடுவே கட்டப்பட்டு வரும் தடுப்பின் மீது வேகமாக மோதியது. இதில் கார் முன் பகுதி முழுவதும் சிதைந்து போனது. இதில் காரில் இருந்த ராஜேந்திரன் எம்.பி., கார் டிரைவர் அருமைச்செல்வம், தமிழ்ச் செல்வன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். திண்டிவனம் போலீசார் அவர்களை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ராஜேந்திரன் எம்.பி. பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த அருமைச் செல்வம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் திண்டிவனம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
62 வயதான ராஜேந்திரனுக்கு சாந்தா என்ற மனைவியும், இரு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். தற்போது சென்னையில் பணிபுரியும் அவரது மனைவி திண்டிவனம் சென்று கொண்டிருப்பதால், எம்.பி. ராஜேந்திரனின் உடற்கூறாய்வு இன்னும் தொடங்கவில்லை.
விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. ராஜேந்திரன், இன்று அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 62. சாலையின் நடுவே கட்டப்பட்டு வரும் தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு இல்லாதது, சீட் பெல்ட் அணியாததால், ஏர் பேக் வேலை செய்யாதது ஆகியவையே உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.