January 2, 2019
தண்டோரா குழு
அதிகாலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 பெண்கள் தரிசனம் செய்தனர்
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் சபரிமையில் பெண்கள் நுழைவதற்காக போராட்டங்கள் நடைபெற்றன. சபரிமலையில் சாமி தரிசனத்துக்காக செல்லும் பெண்களை தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க கேரள போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதற்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் சபரிமலையின் புனிதத்தை காக்க வலியுறுத்தி கடந்த டிசம்பர்-26 ஐயப்ப பக்தர்கள் கேரளா முழுவதும் ஐயப்ப ஜோதி ஏந்தி போராட்டம் நடத்தினர். அதைப்போல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டி நேற்று கேரளாவில் 620 கிமீ பெண்கள் மதில் சுவர் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் 50 வயதுக்கு கீழ் உள்ள இரு பெண்கள் 18 படிகள் ஏறி அதிகாலை 3.45 மணியளவில் தரிசனம் செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.மேலும், அவர்களில் ஒருவர் இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) அமைப்பினை சேர்ந்த பிந்து (வயது 42) என்றும் மற்றொருவர் கனகதுர்கா (வயது 44) என்றும் தெரிய வந்துள்ளது.