December 5, 2018
தண்டோரா குழு
வாகன ஓட்டிகள் அசல் லைசென்ஸ் வைத்திருப்பது கட்டாயம். எந்த ஒரு வாகனத்தையும் இயக்கும் வாகனஓட்டிகள், அவர்களுடன் அசல் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
எந்த ஒருவாகனத்தையும் இயக்கும் வாகன ஓட்டிகள், அவர்களுடன் ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் லைசென்ஸ் வைத்திருக்காத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பது காவல் துறையினருக்கு கடினமாக உள்ளது என்றும், மூன்று முறை ஒரே மாதிரியான விதிமுறைகளை மீறினால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய முடியும் என்ற போதிலும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காத காரணத்தால் அதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதிகள் வினித்கோத்தாரி, அனிதாசுமந்த் ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது லாரி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நவம்பர் 19ஆம் தேதி இது தொடர்பாக மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
அதன்படி, வாகன ஓட்டுநர் உரிமம், அல்லது, டிஜிட்டல் வாகன ஓட்டுனர் உரிமத்தை தங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் கோரிக்கையை, மத்திய அரசு உத்தரவு உறுதி செய்துள்ளது என்பதால், இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். மத்திய அரசின் அறிவுறுத்தல் ஏற்கனவே அமலில் உள்ள காரணத்தினால் நீதிமன்றம் மீண்டும் அதுதொடர்பாக உத்தரவிடவில்லை. ஆனால், அசல் லைசென்ஸ் வைத்திருப்பது கட்டாயம் என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.