September 17, 2020
தண்டோரா குழு
அங்கோட லொக்கா கொலையா மாரடைப்பால் மரணமா என்ற கேள்விக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக உடற்கூறு அறிக்கை பெலியாகியுள்ளது.
கோவை சேரன் மாநகர் பகுதியில் இலங்கையை சேர்ந்த பிரபல தாதா அங்கோட லொக்கா (36) வசித்து வந்தார்.இவர் கடந்த ஜூலை மாதம் முதல் வாரம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்து விட்டார்.போதைமருந்து கடத்தல் விற்பனை, கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை இலங்கை போலீசார் தேடி வந்தனர்.நிழல் உலக தாதாவான அங்கொட லொக்கா தலைமறைவாக இருந்து கோவையில் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவரது இறப்பு மற்றும் போலி ஆவணம் தயாரித்து கோவையில் தங்க வைத்தது தொடர்பான வழக்கில் இவரது காதலி அமானி தாஞ்சி, வழக்கறிஞர் சிவகாமசுந்தரி மற்றும் தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அங்கோட லொக்கா கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து பீளமேடு போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் இறந்த அங்கோட லொக்கா உடற்கூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடய அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.இதில் அவர் மாரடைப்பு காரணமாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.கொலையா அல்லது உடல் உபாதை இயற்கை மரணமா என சந்தேகம் எழுந்து வந்த நிலையில் உடற்கூறு அறிக்கை முடிவுகள் கள்ள கடத்தல் மன்னன் மாரடைப்பல் மரணம் அடைந்தார் என உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் இறந்தவர் அங்கொட லொக்கா தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தன் சொந்த நாட்டின் கண்ணில் மண்ணை தூவி கோவையில் கடந்த இரண்டு வருடமாக தஞ்சமடைந்த அங்கொட லொக்கா, தன்னை வேறு ஒரு நாட்டுக்கு சென்று சுதந்திரமாக இருக்க தன்னை இறந்துள்ளதாக காண்பிக்க ஏதேனும் சதி வேலை செய்கின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே இலங்கையில் வசிக்கும் அங்கோட லொக்காவின் பெற்றோர் டிஎன்ஏ மாதிரியை சேகரித்து அதை ஒப்பிட்டு பார்த்து இறந்தது அங்கோட லொக்கா தான் என உறுதி செய்ய சிபிசிஐடி போலீசார் இதற்கு முன்பாகவே திட்டமிட்டனர்.அதன்படி அந்த மரபணு மாதிரிகளை சேகரிக்க இலங்கை அரசாங்கத்தை சிபிசிஐடி நாடியுள்ளது. விரைவில் டிஎன்ஏ சோதனை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.