February 1, 2022
தண்டோரா குழு
கோவையில் சில நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதாக குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
அதனடிப்படையில், கோவை ஆட்சியர் அலுவலக திட்ட அதிகாரி பிஜூ அலெக்ஸ் தலைமையில் நேற்று சலீவன் தெருவில் உள்ள அப்பாஸ் என்பவரது டையிங் நிறுவனத்தில் சோதனை செய்தனர்.அப்போது அங்கு வடமாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் 2 பேரை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் குழந்தை தொழிலாளர்கள் 2 பேரை மீட்டனர்.
இது தொடர்பாக வெறைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில்,போலீசார் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய டையிங் நிறுவன உரிமையாளர் அப்பாஸ் உதித் ஷேக் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வபுரத்தில் உள்ள ஸ்வீட் கடையில் குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.