November 30, 2021
தண்டோரா குழு
கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் இன்பேன்ட் ஐசக் ராஜ்(21). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் சில நாட்களாக தன்னால் நன்றாக படிக்க முடியவில்லை என மன வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி அவர் தனது பெற்றோருடன் தாராபுரத்தில் ஒரு துக்க நிகழ்வில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் மறுநாள் அவர் மட்டும் தனியாக கோவை திரும்பினார். வீட்டில் ஐசக் ராஜ் தனியாக இருந்தார். ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில்,நேற்று முன்தினம் இரவு அவரது பெற்றோர் தாராபுரத்தில் இருந்து கோவை திரும்பினர். வீட்டுக்கு சென்று கதவை தட்டினர். நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் தூங்கியதாக எண்ணிய அவரது பெற்றோர் அருகே உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று இரவில் தங்கினர். மறுநாள் காலையில் வீட்டுக்கு சென்றனர்.
மீண்டும் கதவை தட்டியும் திறக்கவில்லை. பயந்துபோன அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவைப்புதூர் பெருமாள் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரவதனா(45). இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். மேலும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.