November 23, 2021
தண்டோரா குழு
கோவை கொடிசியாவில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோவை மாவட்ட அனைத்து தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள் கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:
1994 லிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோவை மாஸ்டர் பிளான் திருத்தி அமைக்கப்பட வேண்டும். தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு புதிய மாஸ்டர் பிளான் வெளியீடு விரிவுபடுத்தப்பட வேண்டும். பயன்படுத்த முடியாத வறண்ட நிலங்கள், தரிசு நிலங்கள், ஆகியவற்றை நகரத்தின் முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அடையாளப்படுத்த வேண்டும்.
நகர ஊரமைப்பு இயக்குனர், உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் வீட்டு வளர்ச்சித்துறை ஆகியோரிடம் கட்டிடங்களுக்கான முறையான அனுமதி பெறுவது விரிவுபடுத்தும் வகையில் தகுந்த மென்பொருளுடன் ஒற்றை சாளர அனுமதி முறைப்படுத்தப்பட வேண்டும். சிறு குறு தொழில்
நிறுவனங்களுக்கு உதவி அளிக்க வேண்டும். வாட் முறை மற்றும் நுழைவு வரி தொடர்பாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட வேண்டும். பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது உள்ள ஜி.எஸ்.டி வரம்புகளான 5, 10 மற்றும் 15 சதவீதம் என்று இருப்பதை குறைக்குமாறு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். தமிழக தொழிலாளர் எண்ணிக்கையை வலுப்படுத்த வேண்டும்.
கோவையில் மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும். இந்தியாவில் முக்கியமான ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் ஒன்றாக திகழும் தமிழக சுமார் 1.25 பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. கோவை சூலூர் பகுதியில் 400 ஏக்கர் நிலம் பாதுகாப்பு துறை சார்ந்த தொழில் பூங்கா ஏற்படுத்த கொள்கை முடிவு உள்ளது. இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். பாதுகாப்புத்துறை உட்கட்டமைப்பு மற்றும் சோதனை மையம்.
பாதுகாப்பு துறைக்கான ஒரு கட்டுப்பாட்டு மையம் கோவையில் உருவாக்க வேண்டும். ராணுவ தளவாட உற்பத்திப் பொருட்களுக்கான சோதனை மற்றும் உட்கட்டமைப்பு திட்டம் கோவையில் அமைக்க வேண்டும். பவுண்டரி மணலை மறுசுழற்சி செய்து சாலை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். கோவை விமான சேவையில் இருவழி விமான சேவை ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
திருச்சி -சிங்காநல்லூர் சாலை, சுந்தராபுரம் -பொள்ளாச்சி சாலை, சரவணம்பட்டி -சத்தி சாலை, ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு மனுவில் உள்ளது.