November 18, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தடாகம் மாங்கரை பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த சுமார் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு கனிம வளத்தை கொல்லையடிப்பதாக தொடரப்பட்ட வழக்கினால் உயர் நீதிமன்றம் தடை விதித்து சீல் வைத்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் சீல் வைக்கப்பட்டுள்ள சில செங்கல் சூளைகளில் இருந்து இரவோடு இரவாக செங்கல் மற்றும் சூளைகளில் உள்ள இயந்திரங்களை அப்புறப்படுத்தி உரிமையாளர் வெளி மாவட்டத்திற்கு விற்று வருவதாகவும் இதனால் செங்கல் சூளைகள் இயங்கி வந்த தடயங்கள் அழிக்கப்படுவதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி சமூக நீதி கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து பேட்டியளித்த கணேஷ்,
தடாகம் பள்ளதாக்கு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட செங்கல் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததன் பேரில் கோவை வடக்கு வட்டாட்சியர் 177 செங்கல் தொழிற்சாலைகளை சீல் வைத்து அங்குள்ள இயந்திரங்கள், பச்சை செங்கற்கள், ஜெனரேட்டர், கனரக வாகனங்கள் உள்ளிட்டவற்றை கையகப்படுத்தி மூடி முத்திரையிட வேண்டும் என்றும் வடக்கு கோட்டாட்சியர் அந்த உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆணை பிறக்கப்பட்டு, கனிமவளத்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தடாகம் பள்ளதாக்கு பகுதியில் உள்ள செங்கல் தொழிற்சாலைகளில் இருந்து இரவு பகலாக செங்கல்கள் கடத்தப்பட்டு வெளி சந்தைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 27க்கும் மேற்ப்பட்ட செங்கல் தொழிற்சாலைகள் இயந்திரங்கள், அதி நவீன ரோபோக்களை அகற்றி பழனி ஆகிய பகுதிகளுக்கு விற்று வருவதாக தெரிவித்தார். இது போன்று விதி மீறி செயல்படுபவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்தார். இது போன்று செயல்களில் ஈடுபடுவோர் மீது வடக்கு வட்டாட்சியர், காவல்துறையினர், கனிமவளத்துறையினர், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுகொண்டார்.