October 21, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் வரும் 23ம் தேதி 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் இதுவரை 5 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தம் 5 லட்சத்து 51 ஆயிரத்து 62 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவின் தாக்கம் தற்சமயம் குறைந்து வருகிறது. இந்நிலையில் வரும் 23ம் தேதி சனிக்கிழமை 6-வது தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இம்முகாம் மூலம் இரண்டு இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை முதல் தவணை செலுத்திக் கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணைக்காக காத்திருப்போரும் தற்கள் வீட்டிற்கு அருகில் உள்ள இந்த முகாம்களில் தடுப்பூசி பெற்று பயனடையலாம். இதன்மூலம் கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு கொரோனாவின் தாக்கம் முழுவதும் குறைய வாய்ப்பாக அமையும்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் 1104, மாநகராட்சி பகுதிகளில் 325 என மொத்தம் 1429 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமிற்காக தன்னார்வலர்கள், தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.