August 10, 2020
தண்டோரா குழு
கோவையில் மாநகர பகுதிகளில் சிறிய கோவில்கள் இன்று திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஏழு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 31 ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் ஒரு சில கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் சிறிய கோவில்கள் மற்றும் மசூதிகள் சர்ச்சுகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறினார். இதனையடுத்து இன்று கோவை மாநகர பகுதியில் அதிகாலையிலேயே கோவில் முன் பக்தர்கள் கூடி இருந்தனர்.இன்று அதிகாலை கோவில் திறந்தவுடன் பக்தர்கள் பயபக்தியுடன் சென்று கோவிலில் தரிசனம் செய்தனர்.
முதல் கட்டமாக சிறிய கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் பின்னர் இன்னும் ஒரு சில நாட்களில் பெரிய கோவில்களும் திறக்க அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது 140 நாட்களுக்கு பின்னர் தற்போதுதான் கோவில் திறக்கப்பட்டு உள்ளது என்பதால் மனம் திருப்தியாக இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.