August 4, 2020
தண்டோரா குழு
இலங்கை போதை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா வழக்கை விசாரிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கபட்டு உள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரம் போலி ஆவணம் தயாரிப்பு தொடர்பாக கோவை சிபிசிஐடி போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்தனர். அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக ஒரு வழக்கும், போலி ஆதார் அட்டை மூலம் இந்திய குடியுரிமை இருப்பது போல் ஆவணங்கள் தயாரித்தது என இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி சங்கர் கோவையில் முகாமிட்டு போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகின்றார். இன்று உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு சிபிசிஐடி ஐஜி சங்கர் வருகை புரிந்தார். பின்னர் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டி.எஸ்.பி மாடசாமி சிபிசிஐடி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
சிபிசிஐடி ஐஜி சங்கர்,
அங்கொடா லொக்கா மரணம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளதாகவும்,டிஎஸ்பி ராஜூ விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யபட்டு உள்ளதாக தெரிவித்தார். விசாரணை நடத்த 7 தனிப்படைகள் நியமிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்த அவர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மரணத்திற்கான காரணம் கண்டறியப்படும் என்றார். இதன் பின்னர் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், இவ்வழக்கில் கைது செய்யபட்ட சிவகாமசுந்தரி, அமானி தாஞ்ஞி, தியானேஷ்வரன் ஆகிய 3 பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரித்த பின்னரே உறுதியான தகவல்களை சொல்ல முடியும் என்றார். மேலும் உயிரிழந்தவர் அங்கொடா லொக்கா தானா என்பது குறித்தும் விசாரித்து பின்னரே உறுதி செய்யப்படும் என்றார்.இன்று தான் விசாரணை துவங்கப்பட்டு உள்ளது எனவும் இரண்டு மூன்று நாட்கள் சென்ற பின்னரே வழக்கு குறித்த விபரம் தெரியவரும் என்றவர் விசாரணையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என தெரிவித்தார்.