• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருவனந்தபுரம் பகுதியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது – முதல்வர் பினராயி விஜயன்

July 17, 2020 தண்டோரா குழு

கேரளாவில் இன்று 791 பேருக்கு கொரோனா தொற்று, திருவனந்தபுரம் கடற்கரை பகுதிகளில் சமூக பரவல் ஆரம்பம் என கேரள முதல்வர் விஜயன் கூறியுள்ளார்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் இன்று
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கவலையை ஏற்படுத்தும் வகையில் தினமும் அதிகரித்து வருகிறது. இன்று மிக அதிக அளவில் 791 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நமது மாநிலத்தில் மிக அதிக வேகத்தில் நோய் பரவிக்கொண்டிருக்கிறது. திருவனந்தபுரத்தில் நிலைமை மோசமான சூழலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக கடற்கரை பகுதிகளில் நோய் பரவல் அதிக அளவில் உள்ளது. திருவனந்தபுரத்தில் கடற்கரை கிராமமான புல்லுவிளை பகுதியில் 97 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 51 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பூந்துறை பகுதியில் 50 பேருக்கு பரிசோதனை செய்ததில் 26 பேருக்கும், புத்தன்குரிசு பகுதியில் 75 பேரை பரிசோதித்ததில் 20 பேருக்கும், அஞ்சுதெங்கு பகுதியில் 83 பேரை பரிசோதித்ததில் 15 பேருக்கும் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.இப்பகுதிகளில் நோய் வேகமாக பரவி வருகிறது என்பதையே இந்த பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன.பூந்துறை மற்றும் புல்லுவிளை பகுதியில் சமூக பரவல் தொடங்கிவிட்டது என்றே கூற வேண்டும். எனவே இந்தப் பகுதிகளில் மிக தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.இங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.கடற்கரைப் பகுதிகள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கேரளாவில் இதுவரை 11,066 பேருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன்மூலம் 532 பேருக்கு நோய் பரவி உள்ளது. இவர்களில் 42 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது என தெரியவில்லை. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 135 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 98 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர். சுகாதாரத் துறையை சேர்ந்த 15 பேருக்கும் இன்று நோய் பரவி உள்ளது. திருச்சூரை சேர்ந்த ஒருவர் கொரோனா பாதித்து மரணமடைந்துள்ளார். குருசேரி என்ற பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவரது உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் இவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இவர் தற்கொலை செய்து கொண்டதால் கொரோனா மரண பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இன்று 133 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 246 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 115 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 87 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 57 பேர் ஆழப்புழா மாவட்டத்தையும், 47 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 39 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், தலா 32 பேர் கோழிக்கோடு, திருச்சூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும், 31 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 28 பேர் வயநாடு மாவட்டத்தையும், 25 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 11 பேர் இடுக்கி மாவட்டத்தையும், 9 பேர் கண்ணூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 24 மணி நேரத்தில் 16, 642 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கேரளாவில் பல்வேறு பகுதிகளில் 1,78,481 பேர் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளனர்.இதில் 6,124 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர்.இன்று கொரோனா நோய் அறிகுறிகளுடன் 1,152 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தற்போது 6,029 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4,89,395 பரிசோதனைகள் நடத்தப்பட்ட்டுள்ளன.இதில் 7,610 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 88,903 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில் 84,454 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது.கேரளாவில் 285 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன.

மோசமான நிலையை நோக்கி கேரளாவும் சென்று கொண்டிருக்கிறதோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் நிலைமை மோசமாக உள்ளது. இன்று இங்கு நோய் பாதிக்கப்பட்ட 246 பேரில் 2 பேர் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 237 பேருக்கு நோய் பரவி உள்ளது. இந்த மாவட்டத்தில் 4 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் நோய் பரவியுள்ளது. 3 பேருக்கு நோய் எப்படி பரவியது என தெரியவில்லை. இது ஒரு அசாதாரண சூழ்நிலை ஆகும்.திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் நோய் பரவல் கவலையளிக்கும் வகையில் உள்ளது.எனவே இங்கு முழு ஊரடங்கு முழு ஊரடங்கு அமல் படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பணி முடிந்து வீடுகளில் தனிமையில் இருக்கும் சுகாதாரத்துறை ஊழியர்களை சிலர் ஒதுக்கி வைப்பதாகவும், அவமானப் படுத்துவதாகவும் புகார் வந்துள்ளது. இது தவறான நடவடிக்கையாகும். நாளை அவர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் சுகாதாரத்துறையினர் தான் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கொரோனா நோய் குறித்து பலரிடம் தவறான எண்ணங்கள் பரவி வருகிறது. இது ஒரு சாதாரண ஜலதோஷத்தால் வரும் காய்ச்சல் தான் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இது பரவாது என்றும், ஒருமுறை நோய் பாதித்து குணமானால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் சிலர் தவறாக கருதுகின்றனர். இதில் எந்த உண்மையும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க