March 24, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் மாலை 6 மணிக்கு 144 உத்தரவை தொடர்ந்து கோவை காந்திபுரத்தில் பேருந்து சேவைகள் மற்றும் கடைகள் மூட வலியுறுத்தி காவல்துறை ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தனர்.
உலகம் முழுவதும் கோவிட் காய்ச்சலால் 3,81,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி, பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் அதன் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் தனிமைப்படுத்துதலில் காட்டப்படும் அலட்சியம்.தமிழகத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனாவின் பாதிப்பு தீவிரத்தை மாநில அரசு உணர்ந்துள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு நேற்று வேகவேகமாக பல முடிவுகளை அறிவித்தது. அதில் ஒன்று மாநிலம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடையுத்தரவு நடைமுறைக்கு வந்தன. இதை தொடர்ந்து கோவை மாநகரத்தில் உள்ள காந்திபுரம், சிங்கநல்லூர், உக்கடம் போன்ற பஸ் நிலையங்களில் உள்ள பொதுமக்களை கலைந்து செல்ல வலியுறுத்தி காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் கடைகள் மூடுவதற்கும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் பேருந்துகள் இல்லாமல் ஒரு சில பயணிகள் தவித்து வருவதுடன், கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.