May 7, 2019 தண்டோரா குழு
ரமலான் நோன்பு இன்று தொடங்கியதையடுத்து, இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான், ஈகைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
‘ரமலான்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘கரித்தல்’, ‘எரித்தல்’, ‘பொசுக்குதல்’ என பல பொருள்கள் உண்டு. இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் 3-வது கடமையாக ரமலான் உள்ளது. ரமலான் மாதம் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். மேலும், ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், கடவுளை நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம் என நம்பப்படுகிறது. இந்த ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் மாலை வரை உண்ணா நோன்பு கடைபிடிக்கின்றனர்.
நோன்பு என்பது உணவை உண்ணாமல் இருப்பதோடு நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பதாகும். நோன்பு இருக்கும் நபர் அதிகாலை 4.30 மணிக்கு முன்னர் சாப்பிட வேண்டும். நோன்பு திறப்பதற்கான நிய்யத்தை கூறி நோன்பை திறக்க வேண்டும். மாலை நோன்பை திறந்து உணவை எடுத்துக் கொள்ளலாம். 30 நாட்களும் நோன்பு கடைபிடிக்கப்படுவதுடன், நாள்தோறும் 5 வேளை தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.
நேற்று பிறை தெரிந்ததை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் நோன்பு இன்று தொடங்குவதாக அரசு தலைமை காஜி அறிவித்தார்.
இதையடுத்து, இஸ்லாமியர்கள் நேற்று இரவு திராவிஹ் தொழுகையில் தொடங்கி, இன்று அதிகாலையில் சஹர் செய்தனர். 30 நாட்கள் நோன்பு முடிந்த பின்னர், தங்களின் உறவினர்கள், நண்பர்களுடன் சிறப்பாக விருந்து படைத்து ரமலான் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 4ம் தேதி (செவ்வாய்கிழமை) ரமலான் கொண்டாடப்படுகிறது.