February 26, 2019
தண்டோரா குழு
பாகிஸ்தானில் இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்.14-ம் தேதி நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையில் செயல்பட்டுவந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்தெறிந்தது. இதில் 200 முதல் 300 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமானப்படையின் இந்த வீரதீர செயலுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து
உலகத்தை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் மோடி பல வெற்றிகளை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாட்டின் காரணமாக வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்படுள்ளதாக கூறியுள்ள அவர், பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் டுவீட்
இந்திய விமானப்படையின் வீரதீர செயலுக்கு பெருமைப்படுகிறேன்.
டிடிவி தினகரன்
இந்தியாவின் வலிமையை பாகிஸ்தானுக்கு துணிச்சலுடன் சொன்ன நம்முடைய விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்துகள்…! புல்வாமாவில் இரண்டு தமிழர்கள் உட்பட நம் வீரர்கள் 44 பேர் செய்த உயிர்த்தியாகத்திற்கான விலையைத் தீவிரவாதிகள் கொடுத்திருக்கிறார்கள். தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்!
கமல் வாழ்த்து
இந்திய விமானப்படைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களை வணங்குகிறேன் என கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரஜினி டுவீட்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய விமான படைக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் BRAVO INDIA என்ற வார்த்தையை பதிவிட்டு நடிகர் ரஜினி பாராட்டியுள்ளார்.
இன்னும் பல தலைவர்கள் இந்திய விமானப்படைக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.