February 25, 2019
தண்டோரா குழு
சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தும் என தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த 15-ந்தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள் தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை பத்திரிகையாளர் முன்னிலையில் வெளியிட்டார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் அவர் கூறியிருந்தார்.
பின்னர், அன்றிரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் சென்றார். இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசி உள்ளார். ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதுவரை அவரை கண்டு பிடிக்க முடியாததால் எழும்பூர் ரெயில்வே போலீசில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முகிலன் காணாமல்போன வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தும் என தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனால், நாளைமுதல் சிபிசிஐடி இந்த வழக்கின் மீதான விசாரணையை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.