February 25, 2019
அதிமுகவுடன் கூட்டணி வைப்பது ஏன் ? சர்ச்சைக்கு அன்புமணி விளக்கமளித்துள்ளார்.
அதிமுக – திமுக என திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்து வந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்துள்ளனர். இந்தவிவகாரம் தமிழகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், அதிமுக வுடனான கூட்டணி ஏன்? என்ற கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர்,
அதிமுக உடன் கூட்டணி வைக்குமாறு ராமதாசிடம், பாமக தொண்டர்கள் வலியுறுத்தினார்கள். கடுமையாக விமர்சித்து விட்டு கூட்டணியில் இருக்கிறோம் என்ற கேள்வி எழலாம்.விமர்சனம் செய்து விட்டு கூட்டணிக்கு செல்லமுடியாது என்றால் எந்த கட்சியும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாது.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம் என சொன்னது உண்மை, மறுக்கவில்லை. ஆனால் 2011-ல் சொன்னபோது இருந்த சூழல், தற்போது இல்லை; இப்போது இரு பெரும் தலைவர்களும் இல்லை.
தமிழகத்தில் இனி தனியாக போட்டியிட்டு யாருமே வெல்ல முடியாது.தமிழகத்தில் தனியாக வெல்லும் அளவிற்கு யாருக்கும் பலம் கிடையாது. அதனால்தான் நாங்கள் கூட்டணி வைக்க முடிவு செய்தோம்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் எல்லாம் எங்களை அணுகியது.
திமுக தேர்தல் கூட்டணிக்காக எங்களை அணுகியது.இது தேர்தலின் போது இயல்புதான்.அப்போது வெளியே இருந்து விமர்சனம் செய்தோம், இப்போது உள்ளிருந்து அழுத்தம் கொடுப்போம்.
விஜயகாபாஸ்கருக்கு எதிரான புகார் மீதான விசாரணை முடியட்டும்.
ஆதாரங்கள் எல்லாம் வெளியே வரட்டும்: என் நிலைப்பாட்டை சொல்கிறேன்.
எங்கள் கொள்கைகளை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
நான் போராட வேண்டிய இடத்தில் போராடுவோம், வலியுறுத்த வேண்டிய இடத்தில் போராடுவோம்.சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம்.பென்னாகரம் தேர்தலின் போதே நாங்கள் இந்த முடிவை எடுத்துவிட்டோம். அதிமுகவிற்கு இடைத்தேர்தலில் அதனால்தான் ஆதரவு அளிக்கிறோம். 10 அம்ச கோரிக்கைகளை முதல்வரிடம் வழங்கி உள்ளோம், நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளோம்.விவசாய கடன் ரத்து, காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட திட்டங்கள் வரக்கூடாது என்ற கோரிக்கையை பார்த்துக்கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கும் அரசு நடவடிக்கை எடுக்கும்; நாங்கள் அழுத்தம் கொடுப்போம்.
ஸ்டாலின் இப்போது எங்களை விமர்சனம் செய்கிறார் .கூட்டணி வைக்காத ஆதங்கத்தில் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார்.தோல்வி பயத்தில் அவர் அவதூறு பரப்புகிறார்.
நாங்கள் ஸ்டாலினை விமர்சனம் செய்ய மாட்டோம் .“தமிழக மக்களும், ஊடகங்களும் எங்களுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை; பாமக மீது மட்டும் விமர்சனம் செய்யப்படுவது ஏன்?”
8 ஆண்டுகளாக தனித்து நின்றோம்; யாராவது பாராட்டினீர்களா?
அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு என்று கூறிய திமுகவினர் எத்தனை பேர் இதற்காக சுடுகாடு சென்றுள்ளனர்? என பல்வேறு கேள்வி எழுப்பினார்.