February 23, 2019
தண்டோரா குழு
காஷ்மீர் மக்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதலை கண்டித்த பிரதமர் மோடிக்கு காஷ்மீ்ர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா நன்றி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இதனால் இந்தியா மக்கள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பல்வேறு மாநிலங்களில் கல்வி, பணி, மற்றும் வியாபாரம் நிமித்தமாக தங்கி இருக்கும் காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, மிரட்டல் விடுப்பது போன்ற சம்பவங்கள் தொடந்து நடைபெற்றன. இவ்வேலையில் ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ” காஷ்மீர் மக்களும் பயங்கரவாதத்தால், 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அமைதியை தான் விரும்புகின்றனர். கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில், தீவிபத்து ஏற்பட்ட போது, பாதிக்கப் பட்டவர்களுக்காக, ரத்தம் வழங்க காஷ்மீர் மக்கள் ஏராளமானோர் முன்வந்தனர்.
காஷ்மீர் மாணவர்களை தாக்குவது போன்ற சம்பவம் இனி எங்கும் நடைபெறக்கூடாது. காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல. பயங்கரவாதம், மனிதநேய எதிரிகளுக்கு எதிராகத்தான் நாம் போராடி வருகிறோம். காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் பலத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். இன்று பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட மனநிலை உருவாகியுள்ளது ” இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரும், காஷ்மீ்ர் முன்னாள் முதல்வருமான ஓமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் ‘‘புல்வாமா தாக்குதல் நடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காஷ்மீர் மக்கள் மீது பொது வெளியில் தாக்குதல் நடந்து வருகிறது. இறுதியாக பிரதமர் மோடி தாக்குதல் நடத்தும் கும்பலுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். எனவே தாக்குதல் இனிமேல் குறையும் என நம்பலாம்’’ என பதிவிட்டுள்ளார்.