February 23, 2019
தண்டோரா குழு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முழு மாநில அந்தஸ்து கோரி வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,
‘மொத்த நாட்டுக்கும் ஜனநாயகம் இருக்கிறது. ஆனால் அது டெல்லிக்கு இல்லை. தேர்தல் மூலம் மக்கள்தான் டெல்லி அரசைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், டெல்லி அரசுக்கு எந்தவித உரிமையும் இல்லை. எனவே, மார்ச் 1 முதல் முழு மாநில அந்தஸ்து கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்’. டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் வரை நான் உண்ணாவிரதம் இருப்பேன். நான் சாகவும் தயாராக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரன் பேடியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போது அதனை தொடர்ந்து டெல்லி முதல்வர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.