February 22, 2019
தண்டோரா குழு
பாகிஸ்தானுக்கு எதிராக 2 புள்ளிகளை எளிதாக விட்டுக்கொடுக்க கூடாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
கடந்த 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக மக்கள் கண்டன முழக்கங்ககளை எழுப்பி வருகின்றனர்.இதற்கிடையில், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறி மத்திய அரசு, அந்நாட்டை உலக அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 விழுக்காடு வரி விதித்ததுடன், வர்தகத்துக்கு உகந்த நாடு எனும் சிறப்பு அந்தஸ்த்தையும் ரத்து செய்தது.
இதற்கிடையில், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது குறித்து பிசிசிஐ ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கும் முடிவு பற்றி ஐசிசிக்கு எழுத்துப்பூர்வமாக பதில்கள் அனுப்பிவைக்கப்படும் என தெரியவந்துள்ளது. இதனால் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவது இன்னும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் ட்விட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா பாகிஸ்தானிற்கு எதிராக வென்றுதான் வருகிறது. அவர்களை வீழ்த்த மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானிற்கு 2 புள்ளிகளை இலவசமாக தர வேண்டாம் என்று எண்ணுகிறேன். ஆனால் இந்திய நாடு என்று வரும் போது, நாடு எடுக்கும் முடிவினை நான் மனதார ஏற்கிறேன் ” என்று பதிவிட்டுள்ளார்.