February 22, 2019
தண்டோரா குழு
தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
பாஜக தலைவர் அமித்ஷா, மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று மதுரை வந்தார். அவர் விமான நிலையத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன்பிறகு விமானநிலையத்தில் அமித்ஷாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை எம்பி கோபாலகிருஷ்ணன், விருதுநகர் எம்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,
அமித்ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி; தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார். தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் என்றார்.