February 22, 2019
தண்டோரா குழு
தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் அரசியல் பேச வரவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக – பாஜக- பாமக இடையே கூட்டணி உறுதியானது. அதைப்போல் நேற்று திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.
தேமுதிகவை அதிமுக கூட்டணி இழுக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையில், அண்மையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தை அரசியல் கட்சி தலைவர்களும் , திரையுலக பிரபலங்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து, இன்று நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் , திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்க அவரை நேரில் சந்தித்தேன். அரசியல் குறித்து பேச வரவில்லை, மனிதாபிமான உணர்வுடன் தான் சந்தித்தேன்.விஜயகாந்த் நல்ல முறையில் தேறி வந்துள்ளார்.
மரியாதையுடன் அண்ணன் என்று அழைக்கக் கூடியவர் விஜயகாந்த். கருணாநிதி மீது பக்தி கொண்டவர். கருணாநிதி மறைந்தபோது விஜயகாந்த் வெளிாட்டில் இருந்தார். தாங்க முடியாமல் அவர் அழுத காட்சி இன்றைக்கும் மறக்க முடியாது. நாடு திரும்பியதும் நேரடியாக கலைஞர் நினைவிடம் சென்று அழுத காட்சி மறக்க முடியாதது. இன்னும் ஆரோக்கியமாக அவர் திகழ வேண்டும் என்று அவரிடம் தெரிவித்துக் கொண்டேன் என அவர் தெரிவித்தார்.