February 18, 2019
தண்டோரா குழு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் நடந்த மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆலையை திறக்கக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதற்கிடையில் ஆலையை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்தது. இதையடுத்து, ஆலை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஆலையை திறக்க கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆலையை மூடவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடைவிதிக்கவும் மறுப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது.
இதையடுத்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அதைப்போல் ஆலையை திறக்க அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகமும் வழக்கு தொடர்ந்தது. அதைப்போல், ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் சமூக ஆர்வலர் பாத்திமா பாபு ஆகியோரும் மனுத் தாக்கல் செய்தனர்.இவ்வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 7-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மனுதாரர்கள் அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக கடந்த 11-ம் தேதி தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் இன்று நீதிபதி ரோஹிந்தன் ஃபாலி நாரிமன் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.அதில்,
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்று உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகி அனுமதி பெற்றுக்கொள்ள நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், ஆலையை திறக்கக்கோரி தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.